(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக முதலாவது தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 30 ஆம் திகதி வரையில் இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்படும் என கொவிட்-19 வைரஸ் தடுப்பு விவகாரங்களுக்காக அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் தடுப்பூசிகள் ஏற்கனவே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியை எவ்வாறு பெற்றுக் கொடுக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில், முதலாம் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களுக்கு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியில் இருந்து இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
அதற்கமைய ஏப்ரல் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 30 ஆம் திகதி வரையில் இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்படும். முதலாம் தடுப்பூசி ஏற்றப்பட்டு நான்கு வாரங்களில் இரண்டாம் தடுப்பூசியை ஏற்ற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் புதிய ஆய்வுகளில் பத்து தொடக்கம் 12 வாரங்களுக்கு காலம் தாழ்த்தி தடுப்பூசியை ஏற்ற முடியும் என கூறப்பட்டதற்கு அமைய ஏப்ரல் 19 ஆம் திகதியில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மூன்று இலட்சம் தடுப்பூசிகள் இப்போது கையிருப்பில் உள்ளது. இவற்றை பயன்படுத்தும் காலகட்டத்தில் மேலதிகமாக தேவைப்படும் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment