அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்ரோட்ஸ் என்கின்ற பிரபலமான வணிக வளாகம் உள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை இந்த வணிக வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நபர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இதனால் வணிக வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் தொற்றிக் கொண்டது. வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டு குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிஸாரை குறி வைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பெருகி வரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment