கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் மூன்று அதிதீவிர சிகிச்சை பிரிவுகளை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைகளுக்கான 24 கட்டில்களும் 12 அதிதீவிர கண்காணிப்பு கட்டில்களும் தயார் நிலையில் இருக்கும் என அறிக்கை ஒன்றினூடாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நேற்றுமுன்தினம் (29) கள விஜயத்தில் ஈடுபட்டார்.
இதன்போது, அதிதீவிர சிகிச்சை பிரிவிற்காக 30 வைத்தியர்களையும், 80 தாதியர்களையும், 25 கனிஷ்ட சுகாதார ஊழியர்களையும் நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனைத் தவிர, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் தீவிர சிகிச்சைக்கான வசதிகளை மேலும் விரிவுபடுத்தவும் சுகாதார அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டதாக அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment