பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அண்மைக்காலமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பி எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை ஏற்க முடியாதென அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன பரிபாலன இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், அண்மைக்காலமாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்மையும் அரசாங்கத்தையும் உண்மைக்குப் புறம்பான முறையில் ஊடகங்களில் விமர்சிக்கின்றனர்.
இவர்களுக்கு ஒன்றைக்கூற விரும்புகின்றேன். எமது அரசாங்கமானது, கடந்த கால அரசாங்கம் போல் செயற்படாது. மக்களின் அபிவிருத்தியில் முக்கிய கவனஞ்செலுத்தியுள்ளது. இதனைச் சகிக்க முடியாமல் பல்வேறு விமர்சனங்களை இவர்கள் முன்வைக்கின்றனர்.
காடழிப்பு விடயத்தில் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு எதுவுமில்லை. சமூக ஊடகங்களில் பலரும் தெரிவிக்கின்ற கருத்துக்களை ஆராய்ந்த போதுதான் அவர்கள் எம்மீது அவதூறு செய்கின்றனர் எனப்புரிகின்றது.
எனவே, எம்மை விமர்சிப்பதனூடாக எமது அரசாங்கத்தினையோ அல்லது எனது அமைச்சின் செயற்பாட்டினையோ தடுக்க முடியாது. ஊடகங்கள் மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment