பதுளை - செங்கலடி வீதி பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்த நிலையில், பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர்.
பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 9 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்திய குழுக்களும், சுகாதார குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக 8 அம்பியூலன்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சி.சி.ரி.வி காட்சிகளின் படி எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்தை தாண்டி செல்ல முற்பட்ட வேளையிலேயே பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளார். பசறை பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து இன்று (20) காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment