அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்ய 2300 கோடி ரூபா ஒதுக்கீடு - இன்று பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதாக எதிர்த்தரப்பினர் முழு உலகத்திற்கும் காட்ட முயற்சி : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்ய 2300 கோடி ரூபா ஒதுக்கீடு - இன்று பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதாக எதிர்த்தரப்பினர் முழு உலகத்திற்கும் காட்ட முயற்சி : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

“சுரக்கிமு கங்கா” (ஆறுகளை பாதுகாப்போம்) வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்வதற்காக 2300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி பற்றாக்குறையானால் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேலதிக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காட்சிப்படுத்தலுக்காக சுற்றாடலை பாதுகாக்க முன் நிற்காமல் அனைவரும் தமது பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சமூக வலைத்தளங்களில் சுற்றாடல் தொடர்பாக கதைக்கும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

சுற்றாடல் அழிவு சம்பந்தமான கருத்துக்கள் கொழும்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட செயற்பாடாகும். 10 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்கள் எவ்வாறு இருந்தது என்று பலருக்கும் இன்று மறந்து விட்டது. கொழும்பில் உள்ள குப்பை மேடுகளை அகற்றி, நிரப்பப்பட்டிருந்த தாழ் நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்து கொழும்பை பசுமை நகரமாக மாற்றியதை ஜனாதிபதி நினைவூட்டினார். 

இம் முன்னேற்றம் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்ததாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

இந்நாட்டின் ஆறுகளை பாதுகாக்கும் “சுரக்கிமு கங்கா” தேசிய வேலைத்திட்டம் உலக நீர் தினத்திற்கு இணையாக இன்று (22) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புண்ணிய நகரில் மாணிக்ககங்கைக்கு அருகில் ஆரம்பித்து வைத்தபோதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி நினைவுப் பலகையை திறந்து வைத்து “சுரக்கிமு கங்கா” திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாணிக்க கங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக ஒன்று சேர்க்கும் இடம், கதிர்காம புண்ணிய பூமியில் பொலித்தீன் மலர் மாலைகளுக்கு பதிலாக இயற்கையான மலர் மாலைகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யும் மலர் மாலைகளை அறிமுகம் செய்யும் நிகழ்வும் இந்நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

பல்வேறு பொருட்களையும் சிறு துண்டுகளாக ஆக்கக்கூடிய இயந்திரத்தை மொனராகலை மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் “சொபாகெத்த” சஞ்சிகை மற்றும் “மிகிமடல” பத்திரிகையின் பிரதிகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

“சுரக்கிமு கங்கா” செயற்திட்டத்தின் பூகோள தகவல் தொழிநுட்ப வழிகாட்டல் கணனி செயலி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பத்து அம்ச கருத்தியலின் அடிப்படையில் பசுமை சுற்றாடல் முகாமைத்துவத்திற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தில் பிரதானமானதாக “சுரக்கிமு கங்கா” நடைமுறைப்படுத்தப்படும். சுற்றாடல் பாதுகாப்பின் பிரதான பகுதியான நீரின் தூய்மையை உறுதி செய்து நீர் வளத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். 

ஆறுகளை பாதுகாப்பதன் மூலம் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல், சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுலா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஏனைய நோக்கங்களாகும்.

இலங்கையில் உள்ள 103 ஆறுகளை உள்ளடக்கிய வகையில் “சுரக்கிமு கங்கா” நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச அலுவலகங்களினால் இரண்டு வார காலத்திற்குள் கணனி செயலியை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வின் மூலம் இந்த 103 ஆறுகளோடு தொடர்புடைய பிரச்சினைகள் உள்ள இடங்கள் 10,410 பரீட்சிக்கப்படும். 

ஆற்றின் இரு புறமும் சேதமடைதல், அனுமதியின்றி காணிகளை கையகப்படுத்தல் மற்றும் முறையற்ற கட்டிட நிர்மாணங்கள், மணல் அகழ்தல், வீட்டு அசுத்த நீர் ஆற்றில் கலத்தல், மலசலகூட கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலத்தல் போன்றவை இவற்றில் மிக முக்கியமானவையாகும்.

சுற்றாடல் அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து “சுரக்கிமு கங்கா” நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

இன்றைய நிகழ்வுகளுக்கு இணையாக ஏனைய எட்டு மாகாணங்களிலும் “சுரக்கிமு கங்கா” நிகழ்ச்சித்திட்டம் மாகாண ஆளுநர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.

“பரம்பரை பரம்பரையாக எமது சமூகம் போஷிக்கப்பட்ட இலங்கையில் உள்ள 103 ஆறுகள் உள்ளிட்ட அனைத்து ஆறுகளும் நாம் பெற்ற வரப்பிரசாதங்களாகும். மத்திய மலையகமும் இது சார்ந்த வன ஒதுக்கீட்டுடன் கூடிய நீர் ஊற்றுக்கள் எமது இந்த அழகிய நாட்டை முழுமையாக உள்ளடக்குகின்றது.” அதனால் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சுற்றாடலோடு புவியியல் ரீதியவும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாடாகவும் காணப்படுகின்றதென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாட்டினால் எமது வளிமண்டலம் மாசடைந்தாலும், துரதிஷ்டவசமாக அதன் பிரதிகூலங்களினால் அதிகமாக பாதிப்படைவது அபிவிருத்தி அடைந்து வருகின்ற எமது நாடு போன்ற நாடுகளே என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இன்று பாரியளவில் காடுகள் அழிக்கப்படுவதாக எமது எதிர்த்தரப்பினர் முழு உலகத்திற்கும் காட்ட முயற்சி செய்கின்றனர். “கிராமத்துடன் கலந்துரையாடல்” போன்ற கிராமிய மட்ட நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ளும் எனக்கு அப்பாவி விவசாயிகள் முகங்கொடுத்து வரும் பல்வேறு துன்பங்களை தெளிவாக காண முடிகின்றது அவர்களின் வாழ்வு ஒரு போராட்டமாகவே காணப்படுகின்றது. அவ்வாறானவர்களுக்கு பயிர்ச் செய்கைகளுக்காக காணி ஒன்றை வழங்கும் நடவடிக்கையை தவறான கருத்துக்களை முன்வைத்து காடுகளை அழிக்கும் வகையில் நாம் செயற்படுகிறோம் என்று எதிர்த்தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பொய்யான, மனிதாபிமானமற்ற பிரச்சாரம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட ருச மரக் கட்டைகளை காட்டி அவற்றை சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து எமது இந்த விவசாய செய்கைக்கு காடுகள் அழிக்கப்படுவதாக தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் மூலம் உண்மையான நிலைமையை மாற்றியமைப்பதாகவும் குறிப்பிட்டார். 

இன்று ஆரம்பிக்கப்பட்ட “சுரக்கிமு கங்கா” தேசிய சுற்றாடல் நிகழ்ச்சி எதிர்கால சந்ததியினருக்காக நாம் அனைவரும் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, மாவட்ட, பிரதேச மட்டங்களில் இச்செயற்பாட்டினை மாவட்ட, பிரதேச செயலாளர்கள் முன்னெடுக்க வேண்டுமென்பதை தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தவிசாளர் எஸ்.அமரசிங்க ஆகியோர் இவ் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினர்.

மகா சங்கத்தினர், ஊவா மகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.பீ.ஹேமந்த ஜயசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment