ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதிலில்லை - பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதிலில்லை - பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை துறைமுக தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முன்னெடுத்த போராட்டத்தில் வெற்றி பெற்றோம். துறைமுக தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிது.

இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் செயற்பட்ட விதம் மக்களின் எதிர்பார்ப்புக்குள் முரணானது என்பதை சுட்டிக்காட்டினோம்.

42 வருட கால பின்னணியை கொண்டுள்ள துறைமுக சேவையில் பல உரிமங்கள் அந்நியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல விடயங்களை சாதிக்க முடிந்தாலும் தேசிய மட்டத்தில் அதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கிழக்கு முனையத்தை தேசிய பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை கூட அரசாங்கம் தாமதாமாகியே ஏற்றுக் கொண்டது.

மேற்கு முனையத்தின் 95 சதவீத உரிமத்தை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பெயர் குறிப்பிடும் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெறுக்கத்தக்கது.

இத்தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். மேற்கு முனையத்தை தேசிய மட்டத்தில் அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்துதல் அவசியமாகும்.

தேசிய வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். அதனை பாதுகாக்கும் நோக்கில் துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தை நாளை இடம் பெறவுள்ளது. 23 தொழிற்சங்கத்தினரை உள்ளடக்கி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கைவிட வேண்டும் என சுட்டிக்காட்டி கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்றார்.

No comments:

Post a Comment