மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப் படையினரிடம் கையளிக்கப்பட்டது.
கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகளும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரவிடம் விமானப் படைத் தலைமையகத்தில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டது.
டெங்கு நுளம்புகள் இனம் பெருகும் இடங்களை கண்டறியவும், இனப் பெருக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் வான் வழியாக திரவங்கள் தெளிக்கப்பட வேண்டியதை கண்காணிக்கவும் இந்த கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்படும் என விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பம் மூலம், நுளம்புகளின் இனப் பெருக்க இடங்களை வான் வழி காட்சியாகப் பெற்று அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வரைபடமாக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.
மேலும், அவசியமான வேளைகளில் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அவை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் விமானப் படையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க, மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் பி.சோமசிரி மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment