(நா.தனுஜா)
அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தகுதி வாய்ந்த பொருத்தமான நபர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறின்றி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தமக்கு நெருக்கமானவர்களை மாத்திரம் உயர் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார்.
எனவே நாட்டிற்கு அவசியமான பலம் வாய்ந்த பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு நாமனைவரும் எவ்வித பாகுபடுகளுமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, இவ்வருடத்தில் நாம் முகங்கொடுக்கக் கூடிய சமூக, பொருளாதார, சுகாதார ரீதியான சவால்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஒட்டு மொத்த உலக நாடுகளும் பாரிய சுகாதார நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அதனை எதிர்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தாலும் கூட, அந்த நெருக்கடி மேலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் குறைந்தளவானோரே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்ற வாதமொன்றை முன்வைக்கலாம். எனினும் நாடளாவிய ரீதியில் உயிரிழப்போருக்கு கொவிட்-19 பரிசோதனையை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் அதிகளவானோருக்குத் தென்படாமை போன்றவற்றை கருத்திற்கொள்ளும் போது எமது நாடும் அச்சுறுத்தல் மிக்க நிலையிலேயே இருக்கின்றது.
அதேபோன்று இவ்விடயத்தில் முறையான செயற்திட்டமின்றி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஒட்டு மொத்த நாடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.
மேலும் நாட்டின் கடன் சுமை மற்றும் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதில் காணப்படும் நெருக்கடி, பொருளாதார மந்தநிலை ஆகியவையும் நாட்டிற்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தகுதி வாய்ந்த பொருத்தமான நபர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறின்றி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தமக்கு நெருக்கமானவர்களை மாத்திரம் உயர் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியாது.
மாறாக திறமையானவர்களிடம் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே நாட்டிற்கு அவசியமான பலம் வாய்ந்த பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கு நாமனைவரும் எவ்வித பாகுபடுகளுமின்றி ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment