ஜெனிவா அமர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த வரைபு விரைவில் வெளியிடப்படும் - எம்.ஏ.சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

ஜெனிவா அமர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த வரைபு விரைவில் வெளியிடப்படும் - எம்.ஏ.சுமந்திரன்

ஜெனிவா அமர்வு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களைக் கையாள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடலின் நிறைவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கட்சிகளும், பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக அமைப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கின்ற முயற்சி கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பமானது.

அதைத் தொடர்ந்து ஜனவரி மூன்றாம் திகதி வவுனியாவில் ஒரு கூட்டம் இடம்பெற்றது. அதன் பின்னர் மூன்று கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து கடந்த ஆறாம் திகதி ஒரு கூட்டமும் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னணியில் இதற்கான வரைபும் தயாரிக்கப்பட்டு இன்றைய கூட்டத்தில் அது கலந்துரையாடப்பட்டது.

அந்த வரைபில் இருக்கின்ற விடயங்கள் குறித்து சில மாறுபட்ட கருத்துக்கள் ஆரம்பத்தில் இருந்திருந்தாலும், இறுதியில் ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. அதன்படி அந்த வரைபு சற்று மாற்றியமைக்கப்படும். அது மாற்றியமைக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

அப்படியான குறித்த நிலைப்பாட்டிற்கு அனைத்து கட்சிகளும், அனைத்த பிரதிநிதிகளும் வந்தமை மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். அந்த வரைபை இறுதிசெய்து அனைவரும் இணங்கிய பிறகு அதனை நாங்கள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்றைய கூட்டத்தில் கட்சிகளுக்கிடையில் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதா என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், “கருத்த முரண்பாடுகள் அதிகம் இருந்தன. ஆனால், இறுதியில் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டதாக நான் நம்புகின்றேன். அது சரியான ஒரு ஆவணமாக வருகின்ற வரைக்கும் நாங்கள் அதனை வெளிப்படுத்த விரும்பவில்லை. இதேவேளை மேலும் ஒரு கலந்துரையாடலுடன் இதனை இறுதி செய்து விடலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment