வடக்கு ஆளுநருக்கும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களுக்கிடையே கலந்துரையாடல் - பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

வடக்கு ஆளுநருக்கும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களுக்கிடையே கலந்துரையாடல் - பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

வட மாகாணத்திற்குட்பட்ட அனைத்து திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான இவ்வருடத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நாம் வட மாகாண அபிவிருத்தி என்ற விடயத்தில் பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு தடைகளை தாண்டவேண்டி ஏற்பட்டது. 

வட மாகாண ஆளுநர் என்ற பதவியை ஏற்று ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் என்னோடு இணைந்து பயணித்த பிரதம செயலாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

மாகாண சபையில் முதன் முதலாக கடமையாற்றுவது முதலாவது சந்தர்ப்பம் எனவும் அந்த வகையில் மாகாண சபை ஆட்சி இல்லாத கட்டத்தில் 5 அமைச்சுக்களின் பொறுப்புடன் ஆளுநர் என்ற பொறுப்பையும், இணைத்துக் கொண்டுச்செல்ல வேண்டியிருந்தது.

கொரோனா தொற்றுப் பரவலிலிருந்து வட மாகாண மக்களையும் பாதுகாத்து மக்களின் பொருளாதாரச் சமூக பிரச்சினைகளுக்கு இயலுமான தீர்வுகளை வழங்கியுள்ளதோடு, கடந்த ஆண்டில் வரவு, செலவுத் திட்டமில்லாதபோதும் அதற்கு முன்னைய ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட முக்கிய வேலைத் திட்டங்களை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் கொரோனா தொற்று குறைவாகக் காணப்பட்டது. அந்த வகையில் தேசிய ரீதியில் கொரோனாத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரச ஊழியர் என்ற வகையில் 3 பில்லியன் ரூபாவை பங்களிப்புச் செய்யப்பட்டுள்ளது. 

இதில் 20 மில்லியன் கையிருப்பில் உள்ளதோடு அந்நிதியை பயன்படுத்தி காணி இல்லாதவர்களுக்கு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான காணிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கபட்டுள்ளது. 

யாழ். மக்களின் நீண்டகால பிரச்சினையாகவுள்ள குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. வடமராட்சி பிரதேசத்திற்கான திட்டம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட கடல் நீரை சுத்தமாக்கும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ். மக்களுக்காக அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார். எனவே, ஒரு மாத காலத்துக்குள் அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அதேபோன்று காணி ஆணைக்குழுவை அமைத்து அதனூடாக 550 காணி பிணக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளதோடு பிரதம செயலாளர் எடுத்த முயற்சியினால் 48 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற வழக்கினூடாக பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நீதித்துறையுடனான பேச்சுவார்த்தை மூலம் மீள் நியமனங்கள் செய்யப்பட்டு பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எதிர்வரும் ஆண்டுக்கென ஒதுக்கப்படும் நிதிகளை மத்தியிலோ, நகரத்திலோ, அலங்காரத்திற்கெனவும் மெருகூட்டலுக்காகவும் அல்லாது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயங்களுக்கு மட்டும் செலவு செய்யப்படவேண்டும்.

மேலும், பாடசாலைகள் என்பன வெறும் கட்டடங்களை மட்டும் அமைக்காது மாணவர்களுக்கான அனைத்து தேவைப்பாடுகளும் பூர்த்தி செய்யக்கூடிய நீர் மற்றும் மலசல கூடம் என்பவை காணப்பட வேண்டும். 

உள்ளுராட்சி மன்றங்களினால் அமைக்கப்பட்டுள்ள சந்தைக் கட்டடங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் எவையும் காணப்படவில்லை. எனவே பெண்கள் அமைப்புகள் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.

சுகாதார அமைச்சு மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் இரு வைத்தியசாலைகள் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் வைத்தியர் பற்றாக்குறைக்குரிய தீர்வு எட்டப்படுவுள்ளது என்றார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி துறை ரீதியாக கலந்துரையாடப்பட்டது. 

இவை தொடர்பான திட்டங்களில் மக்களின் தேவைக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி அவற்றை செயற்படுத்த ஆளுனரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அத்துடன் இத்திட்டங்கள் வினைத்திறனாக செயற்றிட்டம் மூலம் முன்னெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நிர்வாக ரீதியில் வழங்கப்பட வேண்டிய நியமனங்கள் எதிர்வரும் பெப்ரவரி 15 இற்குள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் அரச உத்தியோகத்தர்கள் எவராயினும் ஊடகத்துறையின் பகுதி நேர கடமையில் ஈடுபடுவாராயின் அது தொடர்பில் உரிய அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும், குறித்த ஊடக நிறுவனம் ஊடக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

அரச பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் அந்த நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் கூட்டுறவுத்துறையை முன்னேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. கொரோனா இடர்நிலையின் தற்போதைய நிலைமை மற்றும் டெங்கு நிலைமை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் விவசாயத்துறையில் வங்கிகளை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள், உள்நாட்டில் கைத்தறிபுடவை உற்பத்தியின் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், கொரோனா நெருக்கடியில் சந்தைகளை எவ்வாறு திறப்பது, எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் நிலை, மற்றும் ஆயுர்வேத மூலிகைகளை வளர்த்து அவற்றின் தரத்தை முன்னேற்றல் போன்றவை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment