தன்னிலை விளக்கங்கள் கிடைத்தன : விரைவில் உச்சபீடம் கூடித்தீர்மானம் என்கிறார் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

தன்னிலை விளக்கங்கள் கிடைத்தன : விரைவில் உச்சபீடம் கூடித்தீர்மானம் என்கிறார் ஹக்கீம்

(ஆர்.ராம்)

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் அத்தீர்மானத்தின் சாத்தியப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோது பதிலளித்த ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வியடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் உச்சபீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக விளக்கம் கோரியிருந்தோம். 

அதில் சில உறுப்பினர்கள் தமது தன்னிலை விளக்கங்களை வழங்கியுள்ளார்கள். அனைவரினதும் விளக்கங்களை பெற்று கட்சியின் உயர்பீடத்தில் கலந்துரையாடுவதென்று தீர்மானித்துள்ளோம்.

எனினும் கொரோனா சூழலால் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்திற்கு அனைத்து உச்சபீட உறுப்பினர்களையும் அழைப்பதில் சிரமங்கள் நீடிக்கின்றன. அடுத்த பாராளுமன்ற அமர்வு காலத்திற்கு அண்மித்த வகையில் உச்சபீடத்தினை கூட்டுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான நஸீர் அஹமட், எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியேரே 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment