சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து உள்ள சிரியாவில் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் சலாமியா நகரில் உள்ள சலாமியா ராக்கா நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிக் கொண்டு டேங்கர் லொரிகள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் எரிபொருள் டேங்கர் லொரிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் டேங்கர் லொரிகளை ஓட்டி வந்த சாரதிகள் சிலரது உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் லொரிக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியாகினர். இதையடுத்து பயங்கரவாதிகள் அந்த நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த 3 பஸ்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment