புதிய வருடத்திலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது, வெளி பிரதேசங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும், இதுவரை 2021 பேர் கைது என்கிறார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

புதிய வருடத்திலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது, வெளி பிரதேசங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும், இதுவரை 2021 பேர் கைது என்கிறார் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவலினால் கடந்த வருடத்தில் நாம் எதிர்க்கொண்டு வந்த நெருக்கடி நிலமையை, உதயமாகியுள்ள இந்த புதிய வருடத்திலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், அதனை தவிர்த்து செல்வதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று எதிர்ப்பார்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடத்தில் ஒன்பது மாதங்கள் வரை நாம் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தோம். அதற்கமைய இந்த வைரஸ் பரவல் காரணமாக இன்னும் சில பகுதிகள் முடக்கப்பட்டே காணப்படுகின்றன. 

எனினும், தற்போது புது வருடமொன்று பிறந்துள்ளது. உதயமாகியுள்ள புதிய வருடத்தை வரவேற்பதுடன் கடந்த வருடத்தில் நாம் எதிர்நோக்கி வந்த நெருக்கடி நிலைமை மீண்டும் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது. அதனை தடுப்பது என்றால் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிப்பதுடன், சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

இதேவேளை, தேவையின்றி வீட்டை விட்டு வெளி பிரதேசங்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். 

இதன்போது முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை நாட்டு மக்கள் அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு புறம்பாக செயற்படும் நபர்களை பொலிஸார் தொடர்ந்தும் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 திகதி முதல் இதுவரையில் 2021 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பகுதியில் நேற்று முன்தினம் 600 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்தும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment