ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் மாவட்ட ஊடகப்பரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இணைத்துக் கொள்ளப்படாமல் விடுபட்டிருந்த 389 பட்டாதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.
அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு அவற்றில் 181 பேர் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றி ஈ.பீ.எப்., ஈ.ரீ.எப். நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யப்பட்டவர்களும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுமாவர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை தத்தமது பிரதேச செயலகங்களில் திங்கட்கிழமை (25.01.2021) முதல் பெற்றுக் கொள்ள முடியும் எனவும். இவர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 46 பட்டதாரிகளும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 29 பட்டதாரிகளும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்கு 23 பட்டதாரிகளும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு 16 பட்டதாரிகளும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு 18 பட்டதாரிகளும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 9 பட்டதாரிகளும், போரதீவுப்பற்று பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 6 பட்டதாரிகளும், காத்தான்குடி, கிரான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு தலா 6 பட்டதாரிகளும், வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு 5 பட்டதாரிகளும், வாகரை பிரதேச செயலகத்திற்கு ஒரு பட்டதாரியுமாக மொத்தம் 181 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 2088 பட்டதாரி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததில் 1966 பட்டதாரி பயிலுனர்கள் மாத்திரமே 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தமது கடமையினைப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment