வாழைச்சேனை கோறளைப்பற்று தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதி - உயிரச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாரை நாடியுள்ள உதவித் தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

வாழைச்சேனை கோறளைப்பற்று தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதி - உயிரச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாரை நாடியுள்ள உதவித் தவிசாளர்

 க.ருத்ரா
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சபை கால தாமதமின்றி ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் நேற்று (08.12.2020) இடம்பெற்றது. 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்திலுள்ள கோறளைப்பற்று பிரதேச சபையானது, அடுத்தாண்டிற்கான பாதீட்டு அறிக்கையை கடந்த வாரம் (30.11.2020) சமர்பிக்கப்படவிருந்த நிலையில், சபை தவிசாளரினால் நேற்று (08.12.2020) வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் நேற்று (08.12.2020) மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக அமைதியற்ற சூழ்நிலை அங்கு உருவானது.

சபை கூடுவதற்கு முன்பதாக சபை மண்டபத்தை விட்டு தவிசாளர் வெளியில் சென்ற போது, மண்டப நுழைவாயிலில் உப தவிசாளர் எதிரே சந்தித்துத் கொண்டதாகவும், இதனையடுத்து அந்த இடத்தில் அமைதியற்ற சூழ்நிலை இருவருக்கிடையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சபை வளாகத்தில் அமைதியற்ற சூழ்நிலை இடம்பெற்றதுடன். பொலிசார் அமளியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். 

இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது, நேற்று சபையில் நடந்தவை கசப்பான சம்பவம் என்றும், 15-16 உறுப்பினர்கள் சபையிலிருந்த போது, தவிசாளர் தொலைபேசி அழைப்பு வந்து தொடர்பாடல் மேற்கொள்ள சபையினை விட்டு வெளியேறினார். 

அவ்வேளை, உப தவிசாளர் கடும் வேகத்தோடு சபையினுள் உள் நுழைந்ததை அவதானித்தேன். தவிசாளரைத் தாக்கி விட்டு வந்ததையும் மேலாடை கிழிந்திருந்ததையும் அவதானித்தேன் என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக தவிசாளர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது குறித்து உப தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் கீழ்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

தமது ஆசனத்தை காப்பாற்றிக் கொள்ளவும் ஊழல் மோசடியையும் மறைப்பதற்கும் தவிசாளர் இவ்வாறு நடந்திருந்திருக்கலாம். தவிசாளர் சேபா ஜெயரஞ்சித்தினால் தமக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும், தமது மனைவி, பிள்ளைகள் அச்சத்துடன் இருப்பதாகவும் தமக்குரிய பாதுகாப்பினை வேண்டி பொலிசாரின் உதவியினை நாடியுள்ளதாகவும் உப தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து தவிசாளரைத் தொடர்பு கொண்டபோது, தான் சிகிச்சை பெற்று வருவதாகக்கூறி, கருத்து கூறுவதனைத் தவிர்த்துக் கொண்டார். 

வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் நேரில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment