ஜனாசா விவகாரத்தில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக கூட்டமைப்பு நிற்கும் - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 27, 2020

ஜனாசா விவகாரத்தில் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக கூட்டமைப்பு நிற்கும் - செல்வம் அடைக்கலநாதன்

ஜனாசா விவகாரத்தில் முஸ்லீம் மக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக நிற்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் (சனிக்கிழமை) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லீம் மக்களின் ஜனாசா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாகவும் இருக்கிறது. இது நியாயமான கோரிக்கையே. 

உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கை வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லீம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்படவேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது.

தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசு கொடூரமான கரங்களை நீட்டிக்கொண்டு வருகிறது. அதேபோல எமது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை, மிக திறமையாக செய்து வருகின்றது.

இந்த விடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போதுதான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்கமுடியும்.

இந்த விடயத்தில் முஸ்லீம் மக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment