ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் மாவட்டச் செயலக தகவல் திணைக்கள ஊடகப் பிரிவுக்கு புதன்கிழமை 23.12.2020 வழங்கிய தகவல்களில் இந்த விவரங்கள் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 21, 22ஆம் திகதிகளில் பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 6 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 496 நபர்களும், கோறளைப்பற்று வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த 5689 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1561 குடும்பங்களைச் சேர்ந்த 5037 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் 402 குடும்பங்களைச் சேர்ந்த 1285 நபர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 139 குடும்பங்களைச் சேர்ந்த 464 நபர்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 359 நபர்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 97 நபர்களும், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 நபர்களும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 9 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்களும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கிரான், செங்கலடி, வவுணதீவு பிரதேசங்களில் தலா இரண்டு வீடுகளும், வாகரை, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, மண்முனை வடக்கு, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு வீடுமாக மொத்தம் 10 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த இடரினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் எனும் நோக்கில் சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment