விஜயரத்தினம் சரவணன்
கொரோனாத் தொற்றானது எவ்வித அறிகுறிகளும் இல்லாமலே மக்களிடத்தில் பரவி வருவதாலும், பி.சி.ஆர். பரிசோதனைகளிலும் தொற்றுள்ள பெரும்பாலானோருக்கு சாதாரண முடிவுகள் கிடைப்பதாலும் தொற்றாளர்களை இனங்காண்பதில் பாரிய இடர்பாடுகள் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது “கொரோனாத் தொற்றானது, தொற்று ஏற்பட்டாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் காட்டாமலேயே மக்களிடத்தே பரவி வருகின்ற காரணத்தினால், நாம் 14 நாட்கள் கடக்கும் வரையில் எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று கூறுவது கடினம்.
முக்கியமாக பி.சி.ஆர். பரிசோதனையின் பிரகாரமே அறிகுறி இல்லாதவர்களுக்கும், தொற்று இருக்கின்றதா, இல்லையா என முடிவுசெய்ய வேண்டியுள்ளது.
அதேவேளை குறித்த கொரோனத் தொற்றானது பி.சி.ஆர். பரிசோதனையிலும் கிட்டத்தட்ட 70 வீதமானவர்களுக்கு தொற்று இருந்தால்கூட சாதாரண முடிவுகளைக் காட்டுகின்றது.
ஆகையினால் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.
எனவே எமக்கு சந்தேகமான அனைவரையும் சுய தனிமைப்படுத்தலிலோ, அல்லது மற்றவர்களுடன் சம்பந்தப்படாத ஓர் இடத்திலேயோ தனிமைப்படுத்துவதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்
No comments:
Post a Comment