திருக்கோவில், தம்பிலுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த பகுதிக்கான சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
47 வயதுடைய குறித்த நபர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததுடன் கடந்த மாத இறுதிப் பகுதியில் வீடு திரும்பிய நிலையில் சுய தனிமைப்டுத்தப்பட்டிருந்தார்.
இதனிடையே அவருக்கு நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் மூலமே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கொழும்பிலிருந்து திரும்பும்போது பி.சி.ஆர். சோதனை மேற்கொண்ட நிலையிலேயே வருகை தந்துள்ளதாகவும், அந்த பி.சி.ஆர். சோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தனிமைப்படுத்தல் காலத்தில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் மூலம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் கொழும்பிலிருந்து வருகை தர அவர் பயணித்த பஸ்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சுகாதார பரிசோதகர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், மேற்படி நபர் பாலமுனை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பமும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி அவருடன் தொடர்புகளை பேணிய நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment