வட மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகிறோம். என இராணுவத் தளபதி லெப்டின்ன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நேற்று (31) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகப்பரவல் என்பது அதன் அர்த்தத்தின் படி என்னவென்றால் தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும்.
இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப்பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சமூகப்பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா இல்லையா என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரனா தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும்.
நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் (கொரொனாவை கட்டுப்படுத்துவதற்குத்) தமது பாரிய பங்களிப்பினை வழங்க வேண்டும்.
சுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக் கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவுதல், மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல் ஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்துடன் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் முக்கியமாகும்.
பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகிறேன். எனக் குறிப்பிட்ட அவர் வட மாகாண மக்கள் இந்த சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகிறோம்.
அதேவேளை யாழில் சில நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு எம்மால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினர் தெளிவாக மக்களுக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அவ் வழிகாட்டல்களை அனைவரும் கடைப்பிடிக்கும்பட்சத்தில் இந்தப்பிரதேசத்தில் கொரனா நோயே இருக்கமாட்டாது எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment