சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனை செயற்படுத்தப்படுகிறதா ? - 20 இன் ஊடாக ஏகாதிபத்திய தலைவர் ஒருவர் உருவாகும் வாய்ப்பு : ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Friday, November 6, 2020

சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனை செயற்படுத்தப்படுகிறதா ? - 20 இன் ஊடாக ஏகாதிபத்திய தலைவர் ஒருவர் உருவாகும் வாய்ப்பு : ஹெக்டர் அப்புஹாமி

(செ.தேன்மொழி)

நாட்டில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையூடாக கொரோனா பரவலில் இரண்டாம் அலை ஏற்பட்டதா என்பது குறித்து ஆராயுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனை செயற்படுத்தப்படுகிறதா என்று கேள்வியெழுப்பியுள்ள பிரதான எதிர்க்கட்சி, இவ்விடயம் தொடர்பில் தாம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வைரஸ் பரவலின் இரண்டாம் அலை மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊடாகவே ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் பரிசீலனைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், அது உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா ? என்று தெரியவில்லை. ஆனால் நாம் அது தொடர்பில் அவதானத்துடனே இருக்கிறோம். 

இந்த ஆடை தொழிற்சாலைக்கும் ஆளுந்தரப்புக்கும் இடையில் தொடர்புள்ளமையை கடந்த காலங்களில் அவதானித்திருந்தோம். ஆளும் தரப்பினர்களுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இவர்கள் நிதி உதவியும் செய்திருந்தனர். அதனால் ஏதாவது ஒரு நோக்கத்திற்காக திட்டமிட்ட முறையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் வீடுகளில் இருப்பவர்களே உயிரிழக்கின்றனர். இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் அரசாங்கம் நாட்டை வழமை போன்று வைத்திருக்க முயற்சிக்கிறது.

பொதுஜன பெரமுனவின் 4 வருட பூர்த்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவியேற்பு பூர்த்தி நிகழ்வு என்பன விரைவில் இடம்பெறவுள்ளன. அவற்றை விமர்சையாக கொண்டாடும் எண்ணத்திலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது. இவை மாத்திரமின்றி எஸ்.எல்.பீ.எல் கிரிக்கட் தொடரை நடத்துவதும் அரசாங்கத்தின் இன்னுமொரு நோக்கமாக இருக்கின்றது.

தேர்தல் தொடர்பிலும், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்திய காலத்திலிலேயே வைரஸ் பரவலும் ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்கு பாரிய சேவைகளை ஆற்ற முடியும் என்றே ஆளும்தரப்பு கூறியது. ஆனால் அவ்வாறு ஏதாவது பயன்தரும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா?

20 இன் ஊடாக அவ்வாறு எதுமே நடக்கப்போவதில்லை. மாறாக ஏகாதிபத்திய அதிகாரங்களை கொண்ட தலைவர் ஒருவர் மாத்திரமே உருவாக வாய்ப்புள்ளது. அரசாங்கம் தனது அபிலாஷனைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நாட்டு மக்கள் உயிரிழந்தாலும் கூட அதனை கவனத்தில் கொள்ளாது அவர்கள் மீது அக்கறையற்று இருக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்படுகள் தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment