கட்டார் விமான நிலையக் கழிப்பறையில் குறைமாதத்தில் பிறந்த சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் பயணிகளிடம் கட்டாயச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உயிரோடு உள்ள சிசுவின் தாயாரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட விசாரணையில் ஒத்துழைக்குமாறு பெண் பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
டோஹா விமான நிலையத்தில் அண்மையில் பிரசவித்த அறிகுறிகள் உள்ளனவா என்று குறிப்பிட்ட பெண் பயணிகள் சிலரிடம் சோதிக்கப்பட்டது.
விமானத்திலிருந்து அவர்கள் அவசர மருத்துவ வாகனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அந்தரங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. அது எல்லை மீறிய செயல் எனப் பெண் பயணிகள் சிலர் கண்டித்தனர்.
இருப்பினும், சிசுவைப் பிரசவித்த பெண்ணின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு வெளிநாடு செல்லும் முன் அவரை அடையாளம் காண முயன்றதாக டோஹாவின் ஹமாத் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
சோதனைகளில் சிசுவின் தாயாரை அடையாளம் காணமுடியாமற் போனதால், அவர் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டுமென விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்மாதம் 2ஆம் திகதி அந்தச் சம்பவம் நடந்தது. கட்டாயச் சோதனைக்கு ஆளான பெண்களில் அவுஸ்திரேலியப் பயணிகளும் இருந்தனர். அவர்கள் மூலம் தற்போது அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்தச் சம்பவத்துக்கு அவுஸ்திரேலியா கண்டனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த தனது எதிர்ப்பை கட்டார் அரசாங்கத்திடம் அவுஸ்திரேலியா பதிவு செய்தது. அந்தச் சோதனையால் சிட்னிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 4 மணிநேரம் தாமதமானது.
No comments:
Post a Comment