வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட முதிரை மரக் குற்றிகளை புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
பாலமோட்டை பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று (02) அதிகாலை, குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர், லொறி ஒன்றை வழி மறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, உமி மூட்டைகளால் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 23 முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை கடத்திச் செல்ல பயன்பட்ட வாகனத்தையும் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த மரக் குற்றிகள் யாழ். நோக்கி கடத்தி செல்லப்படவிருந்ததாக தெரிவித்த விசேட அதிரடிப் படையினர், கைப்பற்றபட்ட முதிரைக் குற்றிகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா தீபன்
No comments:
Post a Comment