இலங்கையில் பிறந்த வனுஷி வோல்டர்ஸ் நியூஸிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3 ஆண் பிள்ளைகளின் தாயான 39 வயதான வனுஷி வோல்டர்ஸ், வடமேற்கு ஒக்லாந்தில் உள்ள அப்பர் ஹாபர் (Upper Harbour) தொகுதியில், அந்நாட்டு தொழிற்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வகையில் நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக வனுஷி தெரிவாகியுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட, ஜேக் பெசன்ட் எனும் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியும், ஹமில்டன் கழகத்தின் கிரிக்கெட் வீரர், 12,727 வாக்குகளை பெற்ற நிலையில், வனுஷி வோல்டர்ஸ் 14,142 வாக்குகளை பெற்று, குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். நியூசிலாந்து பொதுத் தேர்தல் நேற்று (17) இடம்பெற்றது.
தொழில் ரீதியாக மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும், அந்நாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முகாமையாளராக செயற்பட்டு வரும் வனுஷியின் குடும்பம், மேற்கு ஒக்லாந்தில் கடந்த 3 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றது. ஆயினும் வனுஷி தனது 5 வயதில் நியூஸிலாந்து சென்று அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார்.
வனுஷியின் குடும்பம், யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டதுடன், இவரது தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசு பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து, கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதோடு, சரவணமுத்து விளையாட்டரங்கு (பி சரா ஓவல்) அவரது பெயரிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment