கொரோனா தொற்றுள்ள இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த பத்து பேர் யார்? - விபரமறிய சுகாதாரத்துறை பொதுமக்களின் உதவியை நாடியது - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

கொரோனா தொற்றுள்ள இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த பத்து பேர் யார்? - விபரமறிய சுகாதாரத்துறை பொதுமக்களின் உதவியை நாடியது

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த காரைதீவு வாசி யார்? என்ற விடயத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவுகிறது.

கடந்த 3ஆம் திகதி கொழும்பிலிருந்து (கட்டுநாயக்க) அக்கரைப்பற்று நோக்கி வந்த NB 9701 என்ற இலக்கமுடைய இ.போ. சபை பஸ்ஸில் பயணித்த அம்பாறை யுவதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிருவரும் கம்பஹா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களாவர்.

அதே பஸ்ஸில் பிபிலையில் ஏறி காரைதீவு வரை ஒருவர் பயணித்துள்ளார். காரைதீவில் வந்திறங்கிய அவரை பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அவர் காரைதீவு வாசியா? அல்லது வெளியூர்வாசியா? என்பதும் தெரியவில்லை. அவராக வந்து சுகாதாரப் பணிமனையில் ஆஜராக வேண்டும். இன்றேல் பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை ஆலய ஒலி பெருக்கி வாயிலாக அறிவித்து வருகிறது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவை பணிமனை இவ்விதம் அப்பஸ்ஸில் வந்த கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த 10 பயணிகள் எங்கே ஏறி எங்கே இறங்கினார்கள் என்ற விபரத்தை தெரிவித்து பகிரங்க அறிவித்தல்களை வழங்கியுள்ளது. 

அவர்கள 10 பேரும் தாமாக அந்தந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சமுகமளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் முன்வராவிட்டால் குறித்த பயணிகள் தொடர்பான விபரத்தை அறிய பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையினரின் அறிவித்தலின்படி பிபிலையிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறைக்கு தலா இருவரும் காரைதீவு மற்றும் ஒலுவிலுக்கு தலா ஒருவருமாக பயணித்துள்ளனர். 

இதனைவிட மாவனல்லயிலிருந்து நிந்தவூருக்கும் கண்டியிலிருந்து ஒலுவிலுக்கும் மஹியங்கள மற்றும் பாலமுனையிலிருந்து அக்கரைப்பற்றுக்கும் தலா ஒருவருமாக இப்பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

இவர்கள் பத்து பேரும் சுகாதாரத் துறையினரிடம் வந்து உரிய ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களினதும் அவர்களது குடும்பம் மற்றும் சமுகத்தினருக்காக என்பதை கவனத்திற் கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர.

(காரைதீவு சகா)

No comments:

Post a Comment