ஹரீஸ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்ததால்தான் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வெற்றி பெற்றது என முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
உலமா கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான முபாறக் அப்துல் மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸை அவரது காரியாலயத்தில் இன்று காலை சந்தித்து 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்தமைக்காக அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்ற வகையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதன் பின்னர் தனது கருத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதோ முபாரக் அப்துல் மஜீத் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உண்மையில் 20 ஆவது திருத்த யாப்பு பாராளுமன்றத்துக்கு வந்த போது அரசாங்கத்திற்கு நேரடி ஆதரவாக 145 வாக்குகள் மட்டுமே இருந்தது. அரசாங்கத்தில் மொத்தமாக இருக்கும் பாராளுன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 150 அதில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான மைத்திரிபால சிறிசேனவும் விஜயதாச ராஜபக்ஷவும் மற்றும் இன்னொரு சுதந்திர கட்சி உறுப்பினரும் தெரிவித்தனர். இதனால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோற்கும் நிலை உறுதியாக தெரிந்தது.
இதற்கிடையில் வாசுதேவ நாயக்காரவும், விமல் வீரவங்கவும் கொஞ்சம் மிரட்டுவது போல் பேசினர். இவர்கள் எதிர்த்து வாக்களித்தால் என்ன செய்வது என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருந்தது. அவ்வாறு நடந்தால் 145 என்றால் சட்டம் படு தோல்வியடையும் இதனால் எதிர்க்கட்சியிலிருந்தும் உறுப்பினர்களை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் பேசியது. அவர் சாதகமாக பதிலளித்தார். அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேயுடனும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான அரவிந்த குமாரும் அரசை ஆதரிப்பதாக உறுதியாக சொல்லவில்லை. ஆதரிக்கலாம், எதிர்க்கலாம் என்ற நிலையே காணப்பட்டது.
ஆனால் அரசை ஆதரிப்பது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற குழு உறுதியாக இருந்தது. அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2 பேரும் வாக்களித்து 151 என்ற எண்ணிக்கையில் 20 ஆவது திருத்தம் வெற்றி பெற்றது.
கடைசி நேரத்தில் மைத்திரிபால சிறிசேன தவிர ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து இருவருமாக ஆதரித்தனால் 156 ஆகியது.
சிலவேளை டயனா கமகேயும், அரவிந்த குமாரும் வராமல் விட்டிருந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளிக்காத நிலை ஏற்பட்டிருந்து விமல் வீரவங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் எதிர்த்திருந்தால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோல்வியுற்றிருக்கும்.
அரசுக்குள்ளும் எந்தப்புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவருக்கும் சொல்ல முடியாது. இதன் காரணமாக ஹரிஸின் வாக்குறுதியை நம்பி அரசு நம்பிக்கையுடன் இருந்தது. அதனால் ஹரீஸ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்ததால்தான் நம்பிக்கையுடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வெற்றி பெற்றது என்பதே உண்மை என உலமா கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment