வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் மரணமடைந்துள்ளார். அவருக்கு தவறான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இறந்தவரது உறவினர்கள் கருத்து தெரிவித்த போது வவுனியா மகாறம்பைக்குளம் புளியடி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக நாய்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அவர் சென்றுள்ளார். அவருக்கு நாய் கடித்ததற்கான தடுப்பூசி இன்று காலை போடப்பட்டது. அதன் பின்னர் அவர் வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு வந்த நிலையில் அவருக்கு திடீர் என்று சுகயீனம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் வயது 49 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். குறித்த மரணம் தவறான தடுப்பூசி ஏற்றப்பட்டமையாலேயே சம்பவித்ததாக மரணமடைந்தவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சி.கிசோர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment