பதுளை மாவட்டத்தில் மூவாயிரத்து அறுநூற்று எட்டு (3608) குடும்பத்தினர் இயற்கை அனர்த்தம் உள்ளாகக்கூடிய அபாய வலயப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டிய பாரிய பொறுப்புடன் நாம் இருந்து வருகின்றோம் என தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா குறிப்பிட்டார்.
பதுளை அரச செயலக கேட்போர் கூடத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 339 குடும்பங்களுக்கு காணி உறுதிகளும், வீடுகளை நிர்மானித்துக் கொள்வதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வும் இன்று (18) இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய, டிலான் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், “பதுளை மாவட்டத்தில் அபாய வலயப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 3608 குடும்பத்தினருக்கு பாதுகாப்பான பிரதேசங்களில் வீடுகளை அமைத்துக் கொடுக்க, போதிய காணிகள் இல்லாதுள்ளன. ஆகையினால், இருந்து வரும் சொற்ப காணிகளில் மாடி வீட்டுத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் ஆலோசித்து வருகின்றோம். அரச காணிகள் கிடைக்காத பட்சத்தில், தனியாருக்கு சொந்தமான காணிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியும் ஏற்படும்.
அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையொன்றையும், மேற்கொள்ளவுள்ளோம். தேயிலைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளாத காணிகளை சுவீகரித்து, அக்காணிகளில் இயற்கை அனர்த்தங்களுக்குள்ளாகக்கூடிய அபாய வலயத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வீடுகளை நிர்மானித்துக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். பெருந்தோட்டங்கள் கம்பனியினருக்கு குத்தகைக்கே வழங்கப்பட்டிருகின்றன. அதனை அக்கம்பனிகள் புரிந்து கொள்ளல் வேண்டும்.
இந்நிலையில் 339 குடும்பத்தினரில் பலருக்கு காணி உரிமைப்பத்திரங்களும், சிலருக்கு வீடுகள் அமைக்க காசோலைகளும் வழங்கப்படுகின்றன. ஏனையோருக்கு படிப்படியாக காணி உறுதிகளும் வீடுகளை அமைக்க காசோலைகளும் வழங்கப்படும்.
மேலும் பதுளை மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் சுகாதார முறையிலான மலசலகூடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்து வரும் நிலையினையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனை விரைவில் நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் காசோலைகளைப் பெற்றவர்கள் நேரடியாக மதுபான வகைகள் விற்பனை செய்யும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். காசோலைகளைப் பெற்றவர்கள் தத்தம் வீடுகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவறின் அடுத்த கட்ட காசோலைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும். இதனை பரிசீலனை செய்ய கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு வருவர்.
ஆகவே, அரசு வழங்கும் இவ் உதவிகள் மூலம் உரிய பயன்களை பெற்றுக்கொள்ள வேண்டியது, பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்பாகும். எமது ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் “சௌபாக்கிய இலக்கு” என்ற வேலைத்திட்டத்திற்கமையவே, இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது” என்றார்.
மலையக நிருபர் கிரிஷாந்தன்
No comments:
Post a Comment