நோர்வுட் பகுதியில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் நாவலபிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பெண் நேற்று முன்தினம் நோர்வுட் நகர பகுதிக்கு வந்து மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை பின்பக்கமாக இருந்து கழுத்து பகுதியில் வெட்டி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை நோர்வுட் பொலிஸார் தேடிவருவதோடு நோர்வுட் நகர பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டி.வி. கெமராக்களையும் பொலிஸார் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணை சந்தேகநபர் வெட்டியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நோர்வுட் மேற்பிரிவு தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment