(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது. இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றிருக்காது. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13 ஆவது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்க தரப்பில் குறிப்பிடப்படுகிறது. 13 ஆவது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபைத் தேர்தலில் தங்கியுள்ளது.
மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்யலாம் ஆனால் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது. இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்நியாவின் தலையீட்டினால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் நட்பு மற்றும் நேச நாடாக இலங்கை காணப்படுகிறது. ஆகவே இவ்விடயத்தை இந்தியா கூர்ந்து கவனிக்கும்.
மாகாண சபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் தற்போது எழுந்நிருக்காது. நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை போன்று உரிய காலத்தில் இடம் பெறவிருந்த மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கியது.
No comments:
Post a Comment