ஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் - பிரதமர் மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

இராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன். நாட்டுக்கான ஒப்பந்தங்கள் தொடர்பில் அறிந்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கு முழுமையாக உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெலியத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம். 

இரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த காலகட்டத்தில் பயனான அபிவிருத்தி பணிகளை மாத்திரம் முன்னெடுத்தேன். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாந்தோட்டை துறைமுகம் பலரது எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டது. வீரவிலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விமான நிலையத்தை மத்தளையில் நிர்மாணித்தோம். ஏனெனில் மத்தளையில் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் ஏற்னெவே வகுக்கப்பட்டன.

யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பிறகு வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. அபிவிருத்தி பணிகளில் மாகாணங்களுக்கிடையில் எவ்வித வேறுபாடும் காணப்படக்கூடாது என்ற நோக்கில் அபிவிருத்தி நிர்மாண பணிகள் சம அளவில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கடந்த அரசாங்கத்தில் எந்த மாகாணத்திலும் முறையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டன. மத்தளை விமான நிலையம் நெற் களஞ்சியசாலையாக மாற்றியமைக்கப்பட்டன. அரசியல் பழிவாங்களுக்காக நாட்டின் அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முடக்கப்ட்டன. இதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. என்பதை மக்கள தெரிந்துகொள்ள வேண்டும்.

இராஜதந்திர மட்டத்தில் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற பரிந்துரையினை அமைச்சரவையில் கொண்டு வர எதிர்பார்த்துள்ளேன். ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். எம்.சி.சி ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அரசாங்கத்தை வீழ்த்த பல்வேறு தரப்பினர் இன்றும் சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறார்கள். ஜனாதிபதியின் செயற்பாடுகள் பொதுத் தேர்தலின் ஊடாக பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

வரலாற்று பின்னணியை கொண்ட ஐககிய தேசிய கட்சி இன்று பலவீனமடைந்துள்ளது. இவர்களின் முரண்பாடு இனியொருபோதும் சீர் பெறாது. பொதுத் தேர்தலுக்கு பிறகு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணிப்பார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பலமான அரசாங்கத்தை அமைக்கும் என்றார்.

No comments:

Post a Comment