ஈ.பி.டி.பியிடம் மாத்திரமே மாற்றுக் கருத்தும் மாற்றுக் கொள்கையும் இருப்பதுடன் ஏனைய கட்சிகள் மக்களை உசுப்பேற்றி சூடேற்றும் அரசியலையே செய்வதாக கடற்தொழில் நீரி வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வரலாற்று விடயங்களை தீர்ப்பதாக தெரிவித்து அதனைவிட பலமடங்கு பிரச்சனைகளை கடந்த கால தலைமைகள் எமது மக்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள்.
அதிலிருந்து மக்களை விடுவித்து இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். அதனை ஒரு மாற்றுக் கொள்கையாகவும், பொறிமுறையாகவும் நான் முன் வைத்திருக்கின்றேன்.
கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையைச் சார்ந்தோர் இல்லை என்று குற்றசாட்டு வந்திருக்கின்றது. தற்போது எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதில் சிறுபான்மையினரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த விடயத்தில் சிறு தவறு நடந்திருக்கிறது அதனை திருத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.
அத்துடன் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி ஆகியன ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஈரோசின் ஸ்தாபக உறுப்பினர்களில் நானும் ஒருவர். ஈ.பி.ஆர்.எல்.எப்பிற்கு இரத்தமும் சதையும் கொடுத்து வளர்க்கப்பட்டது. ஆனால் இன்று அந்த பெயரே இல்லாமல் போகும் நிலமைதான் இருக்கிறது. அது அவர்களுடைய துரதிஸ்டம்.
எனவே வீணைச் சின்னத்திற்கு மாத்திரமே மாற்றுக் கருத்தும் மாற்றுக் கொள்கையும் இருப்பதுடன் அதனை வெற்றி கொள்வதற்கான பொறிமுறையும் இருக்கிறது. ஏனைய கட்சிகளிடம் அது இல்லை. மக்களை உசுப்பேற்றி சூடேற்றும் அரசியலே அவர்களது கொள்கையாக உள்ளது.
வவுனியா பொருளாதார மையமானது மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அமைக்கப்படவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் மக்களின் எதிர்பார்ப்பிற்கு புறம்பான வகையில் பல கோடி நிதி செலவளிக்கப்பட்டுள்ளது.
அந்த கடைத் தொகுதியில் வவுனியா மாவட்ட மக்களிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்புடைய அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். விரைவில் அது உரிய வர்த்தகர்களிற்கு பிரித்து வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment