பாறுக் ஷிஹான்
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு இடுகின்ற வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்குச்சமமானது. கல்முனையைக்கூறு போட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளுமில்லை. அவரும் கல்முனை, சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற ஒருவர். எனவே, அவரை ஒதுக்கி விட வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் இலக்கம் 1 இல் போட்டியிடுகின்ற அவர், கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை (1) இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் தம்பி ஹரிஸ் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் எடுக்கும் சில விடயங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும். இம்முறை கல்முனைக்கு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் தேவை. அந்த உறுப்பினர் இப்பிரதேசத்தில் ஆச்சரியத்தை அளிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பவராக இருக்க வேண்டும். கல்முனையைத் தலைநகராக மாற்றியமைப்பது நமக்குத்தேவை. இப்பிரதேசத்தில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பாராளுமன்றப் பிரதிநிதியை நாம் அடையாளம் காண வேண்டிய தேவை இருக்கின்றது.
அம்பாறையில் தேர்தலில் வேட்பாளராக இறங்கியுள்ள கருணா அம்மானைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் காட்டூனில் வந்தது போல பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கிழட்டு புலி. இவரைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
இம்முறை அம்பாறையில் நான்கு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. அம்பாறை என்ற தொகுதிக்கு ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் தான் வர வேண்டும். ஏனைய பொத்துவில், சம்மாந்துறை, கல்முனைத் தொகுதிகளுக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
முஸ்லீம்களைப் பொறுத்தளவில் ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தால், நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இரண்டு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களையும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து போட்டியிட்டிருந்தால், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லீம்கள் சார்பாகப் பெற்றிருக்க முடியும்.
தற்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆறு உறுப்பினர்களைக் களமிறக்கி இருக்கிறார்கள். இவர்கள் எவரும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. இதில் ஒரு உறுப்பினர் 40,000 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டிய சூழ்நிலையேற்படுகின்றது. சிங்கள உறுப்பினர் பெறும் வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றால் மாத்திரமே ஒரு முஸ்லிம் காங்கிரஸ் சார்பான பிரதிநிதியை வெல்ல முடியும்.
கடந்த காலங்களில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சராக இருந்தும், ஒரு மைதானத்தைக்கட்ட முடியாதவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ். இவர் உள்ளூராட்சி அமைச்சை வைத்திருந்து கல்முனைப் பிரச்சனையைத் தீர்க்க முடியாதவர்.
வங்கிக்கட்டடமொன்றைக் கட்ட முடியாதவரை மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? அல்லது மாகாண சபை உறுப்பினராக இருந்து பல சேவையாற்றிய என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என மக்கள் தீர்மானிக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் மூன்றாண்டுக்களுக்குள் கல்முனைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன்.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய இரு முஸ்லிம் கட்சிகளில் போட்டியிடுகின்ற இரு கட்சிகளுக்கு போடும் வாக்குகள் கடல் நீரில் கரைத்த உப்பிற்குச் சமமானது. கல்முனையைக் கூறு போட துணிந்த அதாவுல்லாஹ்வின் கட்சிக்கு வாக்களிப்பதில் எனக்கு எந்தவித உடன்பாடுகளுமில்லை. கல்முனை சாய்ந்தமருது பிரிப்பில் மகிழ்கின்ற அவரை ஒதுக்கி விட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment