அமைச்சரவை அமைச்சர்களும், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் வாடகை அல்லது கட்டணம் செலுத்தியும் அரச வாகனங்களையும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பு தொடர்பில் கடந்த செவ்வாயன்று அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு அன்றைய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய ஒரு இலட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியே அரசு வாகனங்களும், வாசஸ்தலங்களில் தமது பிரசார பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. அன்று தேர்தல்கள் ஆணைக்குழு அதனை தடுக்க முற்படவில்லை. இது தேர்தல் விதிகளுக்கு முரணாக காணப்படவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்த போதும் தற்போது ஆணைக்குழு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு குறித்து உடனடியாக தீர்மானிக்காமல் ஆணைக்குழு தலைவருடன் தேர்தல் விதிகள் குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் அரச வாகனங்கள், சொத்துக்கள், கட்டிடங்களை கட்டணம் செலுத்தியோ கட்டணம் செலுத்தாமலோ பயன்படுத்த முடியுமா என்று கேட்ட போது, தேர்தல் சட்ட விதிகளில் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் சட்டவிதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில் ஆணைக்குழு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment