நாட்டின் பொருளாதார திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிதி அமைச்சு எடுக்கின்றதா? ஜனாதிபதி செயலாளர் எடுக்கின்றாரா - தலதா அத்துகோரள கேள்வி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

நாட்டின் பொருளாதார திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிதி அமைச்சு எடுக்கின்றதா? ஜனாதிபதி செயலாளர் எடுக்கின்றாரா - தலதா அத்துகோரள கேள்வி

(செ.தேன்மொழி) 

நாட்டின் பொருளாதார திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை நிதி அமைச்சு எடுக்கின்றதா? ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் எடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள இந்த விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் பொறுப்புக் கூறவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதிலிருந்து இன்றுவரை எதேச்ச அதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். 

எதற்கென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார். அவரது செயற்பாடுகளினால் அவருக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் மாத்திரமின்றி அனைவரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசியலமைப்பை மீறி செயற்படுவதனூடாக இவர் எதேச்ச அதிகாரமிக்க ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றார். 

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கு வரியை அதிகரித்துள்ளனர். இதனால் சாதாரண மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி தேசத்திற்கு உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ டின் மீனுக்கும் பருப்புக்கும் சலுகை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தற்போது வரி அதிகரிப்பினால் அந்த பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க தன்னிடம் நிதி இல்லை என்று தெரிவித்துக் கொண்டு நெஞ்சாலைகளை அமைப்பதற்காகவும், பெருந்தெருக்கள் புணரமைப்புக்கும் மற்றும் விளையாட்டு அரங்கு அமைப்பதற்காகவும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடன் பெறுவது எவ்வாறு என்று சிந்தித்து வருகின்றது. 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த வேலைத்திட்டங்கள் அவசியம்தானா? தற்போது அரச தரப்பு அமைச்சர்களே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக் காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் அதனையே பாடுப்பொருளாய் கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்பட மாட்டோம். 

நாட்டின் நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறுகின்றதா இல்லை ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் தலையீட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. 

பாராளுமன்ற தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்படதா நிலையிலும் தொடர்ந்தும் நிதி ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்புக்கு புறம்பான செயற்பாடாகும். இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை ஏற்படும்.

No comments:

Post a Comment