அம்பாறையில் கடல் மீன்களின் விலை குறைவு - நுகர்வோர் மகிழ்ச்சி - சில பகுதிகளில் விலை ஏற்றங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

அம்பாறையில் கடல் மீன்களின் விலை குறைவு - நுகர்வோர் மகிழ்ச்சி - சில பகுதிகளில் விலை ஏற்றங்கள்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுகின்றது .

இன்றைய தினம் திங்கட்கிழமை (6) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனைகுடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டதை அடுத்து விலைகள் குறைவடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். அதுமாத்திரமின்றி பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில் அதிகளவு மீன்கள் பிடிப்பட்டுள்ளன.

இதனால் சூரை ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்டதுடன் முரல் ஒரு கிலோ 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 450 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 700 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 600 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 650 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 300 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 850 ரூபாயாகவும் வளையா மீன் 500 ரூபா திருக்கை மீன் ஒரு கிலோ 400 ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை கல்முனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். இருந்தபோதிலும் சில மீனவர்கள் மீன்களின் விலை ஏற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாது என தத்தமது ஆதங்கங்களை தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறைவடைந்துள்ளது. அத்துடன் கருவாடு வகைகளின் விலையும் இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

No comments:

Post a Comment