(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உண்டு. சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுத்தாக்கலை இரத்து செய்யும் அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்த்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உண்டு.
மக்களுக்கு நிவாரணம் வழங்க ஆதரவு வழங்குவதாக தற்போது குறிப்பிடும் எதிர்க்கட்சியினர், கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கணக்கு வாக்கெடுப்புக்கு ஏன் ஆதரவு வழங்கவில்லை.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒரு சிலர் பொதுத் தேர்தலை நடத்துவதை தவிர்க்கும் விதத்திலான கருத்துக்களை குறிப்பிடுகின்றார்கள். ஆகவே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறானவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுத் தேர்தலுக்காக ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு தாக்கலை இரத்து செய்ய அரசியல் சூழ்ச்சி வகுக்கப்படுகின்றன. தவறான முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment