(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பதான அரசாங்கத்தின் தீர்மானமானது ஒருதலைப்பட்சமானதாகும். உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் தொடர்பாக கண்டுகொள்ளாமலே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பதற்கும் முடியும் புதைப்பதற்கும் முடியும் என உலக சுகாதரா ஸ்தாபனம் பரிந்துரை செய்திருக்கின்றது. அதேபோன்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் எழுத்து மூலம் அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றது.
இந்த விடயங்கள் எதனையும் கருத்திற்கொள்ளாமல் அரசாங்கம் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பதாக தெரிவித்து தற்போது வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.
அத்துடன் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மரணிக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை புதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தன.
இந்த கோரிக்கையானது, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கமையவே முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அந்த கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்காமலே மரணிப்பவர்களை எரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.
அரசாங்கம் அவ்வாறு தீர்மானம் ஒன்றை எடுப்பதாக இருந்தால் அது தொடர்பாக விஞ்ஞான ரீதியிலான தெளிவை முன்வைக்க வேண்டும். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்கள் எமது அயல் நாடான இந்தியா உட்பட உலகில் 182 நாடுகளில் புதைக்கப்படுகின்றனர். அதனால் புதைப்பதென்பது உலகில் இடம்பெறாத ஒரு விடயமல்ல.
அதேபோன்று கொரோனா தொற்று நீரில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் புதைப்பதனால் வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று நீரில் பரவும் அபாயம் இருப்பதாக இருந்தால், இந்த நோய்க்கு ஆளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட நீர் எங்கு செல்கின்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த கழிவு நீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
அத்துடன் கொரோனா தொற்று நீரில் பரவுவதில்லை என தொற்று நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் பபா பலிகவதன தெரிவித்திருக்கின்றார்.
எனவே அரசாங்கம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மரணிப்பவர்களை எரிப்பதென்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து, புதைப்பதால் பாதிப்பு ஏற்படுகின்றதா என்பதை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment