அமெரிக்காவில் உயிரிழந்த 20 வயது மகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான அனுமதியை மனிதாபிமான அடிப்படையில் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்குண்டுள்ள தாயார் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்காவில் கடந்த வாரம் இராணுவப் பயிற்சியின் போது திடீர் என மரணித்த லியோன் சியுபொலி என்ற இளைஞனின் தாயாரே இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அமெரிக்க இராணுவத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் இணைந்துகொண்ட லியோன் வோசிங்டனில் 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
அவரது தாயாரும் சகோதரங்களும் தற்போது அவுஸ்திரேலியாவில் சிக்குண்டிருந்தார்கள். கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து தடை காரணமாக தங்கள் மகனின் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்கா செல்ல முடியாத நிலையில் அவர்கள் காணப்பட்டனர்.
எனது மகனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், அவரிற்கு கண்டுபிடிக்கப்படாத இதய நோய் இருந்துள்ளது என்பது மாத்திரம் தெரியவந்துள்ளது என லியோனின் தாயார் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சிக்குண்டிருந்த உயிரிழந்தவரின் தாயாரும் இரண்டு சகோதரங்களும் கடவுச்சீட்டினை புதுப்பித்துள்ளதுடன் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான அந்த நாட்டின் அனுமதியை பெற்றுள்ளனர். எங்களிற்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுமதி தேவை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை அவர்களிற்காக நீக்கியுள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment