ஹொரோனா பரவல் காரணமாக நாடு பெரும் இடர்களைச் சந்தித்து வருகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதியும் அரச தரப்பினரும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் சில குறைபாடுகள் எமது கவனத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்கள், சமய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அலுவலகர்கள், கடந்த மாத சம்பளத்தை தாம் இதுவரை பெற முடியாத நிலை இருப்பதாகச் சுட்டி காட்டுகின்றனர். எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதியும் அரசும் கூடிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்த அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. அவ்வப்போது ஆங்காங்கே குறைபாடுகள் ஏற்படத்தான் செய்யும் எனினும் அவற்றை சுட்டிகாட்டி அதற்கான மாற்று வழிமுறைகளை ஏற்பாடு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
இன்றைய நிலையில் ஆன்றாடம் தொழில் செய்து வருமானம் ஈட்டுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சைக்கிள் வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் பாதிப்புற்றுள்ளனர்.
இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகைளில் திட்டங்கள் அமுல்படுத்தப் படவேண்டும். அத்தோடு இவர்களது தொழிலை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசும் உடன் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை, சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு அரசு 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்குவதாக அறிவித்தபோதும். அவை அவர்களது வைப்பு கணக்கில் இருந்துதான் வழங்கப்படுகிறது எனவும் அதிலும் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாதான் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.
இது விடயத்தில் மக்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் செயன்முறைகள் உருவாக்கப்பட வேண்டும். எதிர்வரும் கொடுப்பனவுகள் அரசின் நிவாரண கொடுப்பனவுகளின் ஊடாக கிடைக்க வழி செய்ய வேண்டும். என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் முன் வைக்க விரும்புகிறேன். என தெரிவக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment