(ஆர்.விதுஷா)
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படவில்லை. மாறாக மக்கள் விரும்பிய புரட்சியே இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா சிங்கள பௌத்தனாகவும் அனைத்து இன மதத் தவர்களையும் நேசிக்கக் கூடிய ஒரு நல்லவராகவும் இருக்க கூடியவரின் கைகளுக்கு அதிகாரம் செல்வதே நாட்டு மக்களின் விருப்பாக இருந்தது எனவும் அந்த மாற்றமே இப்பொழுது கட்சிக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நுகேகொடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினுடைய வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசிய கட்சியினுள் இடம்பெற்றிருக்கும் புரட்சிக்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடைய நூறு சதவீதப்பங்களிப்பு கிடைத்துள்ளது. கட்சியை பிளவு படுத்துவது எமது நோக்கமல்ல. ஏனெனில் நாம் அனைவரும் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவர்களே.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சி வரும் போது மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டது. அதற்கு மாறுபட்ட கோணத்திலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கோத்தாபய அரசாங்கம் பூச்சிய நிலையை அடைந்துள்ளது.
ஏனெனில் பொருட்களின் விலை அதிகரிப்பை தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அக்கறையுடையவர்களானால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னராக நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக அவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளே இடம் பெற்றுள்ளன. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment