முல்லைத்தீவு நகரில் உள்ள பிரதேச வைத்தியசாலையால் நடமாடும் மருத்துவ சேவையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா சிரேஸ்ட தாதியர் தர்மராசா சுகிந்தராசா, மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி ஆகியோர் தங்களது வைத்தியசாலையில் மாதாந்த மருத்துவ சேவை (கிளினிக்) பெறுவோருக்கு நடமாடும் சேவை மூலம் ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று பரிசோதித்து அவர்களுக்குரிய மருந்துகளை இன்று (25.03.2020) முதல் வழங்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்புலவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு இந்த வைத்திய சேவை வழங்கப்படவுள்ளது.
இதன்படி இன்று (25.03.2020) உண்ணாப்புலவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்று தங்களது மாதாந்த மருத்துவ சேவை (கிளினிக்) வழங்கியுள்ளனர்.
நாட்டில் கொவிட் 19 தொற்று தடுப்புக்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் வைத்தியசாலைக்கு வர முடியாத நோயாளர்களுக்கு குறித்த வைத்தியசாலையில் கிளினிக்கு வரும் நோயாளர்களுக்கும் சிரமத்தை போக்கும் நோக்கோடு வீடு தேடி சென்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.
முல்லைத்தீவு நிருபர்
No comments:
Post a Comment