கொரணா வைரஸினால் பாதிப்புக்குட்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ‘கரண்டைன்’ எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பராமரிப்பு நிலையத்திலுள்ளவர்களுக்கு உதவும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம், இலங்கை இராணுவத் தலைமையத்தினூடாக உடன் உண்ணக் கூடிய உணவுப் பதார்த்தங்களை உள்ளடக்கிய 1000 பொதிகளை இன்று 20 ஆம் திகதி காலை வினியோகம் செய்துள்ளது.
இன, மத, நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களையும், பல்வேறு வகையிலும் கொரணா வைரஸ் நோய்த் தொற்று பாதித்துள்ளது. உலக வரலாற்றில் மிகவும் பாரிய மனிதகுல
அச்சுறுத்தலாக இந்த வைரஸ் தொற்று மாறி வருகின்றது. உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் கொரணா வைரஸ் இன் தாக்கம் நமது இலங்கை நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
எனவே மனித நேயம் கொண்ட அனைவரும் தமக்கு சக்திக்குட்பட்ட வகையில் இந்த அனர்த்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு மற்றும் மனித நேய முயற்சிகளுக்கு தமது தரப்பில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டியது கட்டாய கடமையாகும்.
15 வருடங்களாக இலங்கை எதிர்நோக்கிய அனைத்து பாரிய மனித நேய நெருக்கடிகளுக்கும் முன்னின்று பணியாற்றிய முஸ்லிம் எய்ட் சிறிலங்கா ஆபத்தான இக் கொரணா வைரஸ் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன் தனது பணியினை ஆரம்பித்துள்ளது என்பதுடன் இம்மனித அவலத்திலிருந்து நமது மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் முஸ்லிம் எய்ட் தனது முதன்மையான கவனத்தை குவித்துள்ளது.
No comments:
Post a Comment