யாழ்ப்பாணம் - சென்னை விமானப் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க ஆலோசனை - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

யாழ்ப்பாணம் - சென்னை விமானப் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க ஆலோசனை - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகாரமான முடிவு ஒன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய நேற்று (13) விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கடந்த ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்பபாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந்தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி ஆறாயிரம் ரூபாவாக இருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பன்னிராயிரம் ரூபாய் அறிவிடப்படுகின்றமையை யாழ்ப்பாண மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக் காட்டப்பட்டது.

மேலும், அடிப்படை வசதிகள்கூட முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் தேர்தலை நோக்கமாக கொண்டு யாழ்ப்பாண விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்ற போது குறைந்த தூரத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி - தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment