அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரைத் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
ஆனால், தற்போதைய அரசு வேறுவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனவும், பெருன்பான்மை மக்கள் அதிகாரப் பரவலாக்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும், அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும், உண்மைக்குப் புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியாக வந்த அரசுகள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன. எனவே. இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் ஐந்தே வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும், தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற காரணத்துக்காக வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசு பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
உலகின் பலவேறு பகுதிகளில் உள்ளவாறு ஓர் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம் என்று வலியுறுத்திய இரா.சம்பந்தன், இலங்கை எனது நாடு. இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்பட வேண்டும்.
அண்மையில் இலங்கைப் பிரதமருடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் இலங்கை மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றை அடைய முடியாதுபோனால் அது பாரிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் எனத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்களத் தலைவர்கள் மதிக்காதன் விளைவே தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கத்திற்குக் காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைத்த தீர்மானத்தின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார்.
நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டுமெனில் பிரேரணையில் உள்ள விடயங்கள் அமுலாக்கப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
இதற்கப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவதன் அவசியத்தை விளக்கிய சுமந்திரன், தம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நட்டஈட்டுக்கும் எம்மக்கள் அணுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பின் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்ற உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
உண்மையைக் கண்டறிந்து நட்டஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நட்டஈடு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும் எனத் தாம் எதிர்பார்த்ததாகவும், அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்த இரா.சம்பந்தன், எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம். இனிமேல் இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வேலைவாய்ப்பின்மையைக் குறைக்கும் முகமாக புதிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவை என்பதனை சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு விசேட வேலைத்திட்டம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், மீன்பிடித்துறை, விவசாயம், பண்ணை வளர்ப்பு போன்ற துறைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அவ்வாறு செய்யப்படுகின்றபோது உச்ச பயன்பாட்டை அடைய முடியும் என்பதனையும் எடுத்துக்கூறினார்.
சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்க வேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா, இலங்கை அரசானது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று உறுதியளித்தார்.
No comments:
Post a Comment