தமிழ் மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்க மாட்டோம், கூட்டமைப்பை திட்டித் தீர்ப்பவர்கள் புதிதாக முளைத்தவர்கள் - செல்வம் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

தமிழ் மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்க மாட்டோம், கூட்டமைப்பை திட்டித் தீர்ப்பவர்கள் புதிதாக முளைத்தவர்கள் - செல்வம் எம்.பி.

விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை யாருக்கும் அடைமானம் வைக்காது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை தமிழருக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியாவில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில், “எமது தலைவர்களது தியாகம் மக்களது விடுதலை என்ற இலட்சிய நோக்கத்தோடு இருந்தது. அரசாங்கத்தை அரவணைத்துப் போகும் சிந்தனையில் அவர்கள் இருக்கவில்லை. இன்று எமது கட்சி வலுவாக இருக்கிறதென்றால் அவர்கள் அன்று இட்ட அத்திவாரமே காரணம்.

விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தக் கூடாதென்று கருதிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம் என்பதை இங்கு கூறுகிறேன். சகோதரப் படுகொலைகளின் பின்பு நாங்கள் (ரெலோ) இல்லை என்று பலர் கருதினார்கள். நாம் மீண்டும் வந்து புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை இங்கு நினைவு கூருகிறேன்.

விடுதலைப் புலிகள் ஏதாவது தாக்குதல் நடாத்தினால் அடுத்த அடி இங்கு இருக்கும் எமது முகாம்களிற்கு தான் என்று அனைவருக்கும் தெரியும். இன்று ஊனமுற்று, இடுப்பு இயங்காமல் இராணுவத்தால் ஒடுக்கப்பட்டவர்களாக எங்களுடைய போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எமது இயக்கத்தின் செயற்பாடு தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கு எதிராகவே இருந்தது. அன்று மஹிந்த அரசாங்கம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவுகளைப் பணயக் கைதிகளாக வைத்து வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னபோது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கவில்லை. எதிர்த்து வாக்களித்தார்கள். அதுதான் கூட்டமைப்பு இன்றும் மக்களின் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணம்.

கூட்டமைப்பை உருவாக்கியதிலே எமது பங்கு கூடுதலாக இருந்தது. கிழக்கில் சிவராம் மற்றும் பத்திரிகையாளர்கள் அந்த முயற்சியை எடுத்த போது கூடுதலாக நான் அவர்களோடு இருந்தவன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு கூட்டமைப்பு உருவாகிய பின்பு அது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக செயற்பட்ட வரலாற்றையும் இங்கு கூறவேண்டும்.

இன்று கூட்டமைப்பை திட்டித்தீர்ப்பவர்கள் புதிதாக முளைத்தவர்கள். எங்களோடு இருந்துபோன அவர்கள் இன்று எள்ளி நகையாடுகின்றனர். நாம் அதற்குப் பதில்சொல்லத் தேவையில்லை. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தோம். நாம் அடிவருடிகளாக அரசாங்கத்துடன் என்றும் செயற்படவில்லை.

புதிய ஜனாதிபதி சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாகப் பெருமை பேசுகிறார். ஒரு தேசிய இனம் கொழும்பிலே நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக இருக்கக் கூடாது என்று சிங்கள மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்கள். நாம் இனவாதிகள் அல்ல என்ற நோக்கத்தோடு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவருக்கு வாக்களித்தோம். 

எமது நல்ல சமிஞ்சையை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி தயாரில்லை. அதன் பின்னணியே வடக்கு கிழக்கில் உள்ள சோதனைச் சாவடிகள். இந்த சோதனைச் சாவடிகளை நிறுத்த முடியாத முதுகெலும்பில்லாதவர்களாக சில தமிழர்கள் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவே அவர்கள் உள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் எங்களது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடைமானம் வைக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்கா திருப்பி அனுப்புகின்றமை எமக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி. இது ஆரம்பம். எமது இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கிறன. அதற்காக எமது இயக்கம் மற்றும் கூட்டமைப்பு என்ன விலையையும் கொடுக்கத் தாயாராக இருக்கிறோம்” என்றார்.

No comments:

Post a Comment