தாம் தேசியத்தை காப்பாற்றுகின்றோம் என தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதற்காகவே அரசு தேர்தல் நாடகத்தை முன்னெடுத்துவருகிறது - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

தாம் தேசியத்தை காப்பாற்றுகின்றோம் என தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதற்காகவே அரசு தேர்தல் நாடகத்தை முன்னெடுத்துவருகிறது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை அரசு விலகினாலும் அது வலுவாகவே இருக்கும் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தாம் தேசியத்தை காப்பாற்றுகின்றோம் என தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதற்காகவே கோட்டாபய அரசு தேர்தல் நாடகத்தை முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 43 கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளமை தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசும் அதனை நிறைவேற்றுவதாக இணை அனுசரணை வழங்கியிருந்தது.

மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் சர்வதேச நீதி விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளைத் தீர்த்தல், நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணல் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய கோட்டாபய அரசு இந்தத் தீர்மானத்தை தாம் நிராகரிப்பதாகவும் அதிலிருந்து விலகுவதாகவும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பாரிய பாதிப்புக்கள் எதனையும் ஏற்படுத்தாது ஏனெனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல உறுப்பு நாடுகளின் அனுசரணையுடனேயே நிறைவேற்றப்பட்டது. இதில் இலங்கை அரசு விலகுவதாகக் கூறுவது ஒரு சிறு பகுதி மட்டுமே. ஏனைய உறுப்பு நாடுகளின் வலுவான அனுசரணை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். 

எனவே குறித்த தீர்மானம் முழுமையான திருப்தியை தராது விட்டாலும் சர்வதேச வலுவுடையதாகவே இருக்கும் ஆனால் கோட்டாபய அரசு தேர்தல்களை இலக்காகக் கொண்டு சிங்கள தேசத்திற்கு மாயைக் காட்டுக்கின்றன. தென்னிலங்கை மக்களுக்க தேசிய வாதத்தை பேசி படம் காட்டுவதற்காகவே 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

எனவே இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் அந்தத் தீர்மானம் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்கும் அரசு விலகுவதால் பாதிப்பு மிகக் குறைவு என்றே நான் கருதுகின்றேன். இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பிடியில் தொடர்ச்சியாகவே இருந்து கொண்டே இருக்கும்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment