(ஆர்.யசி)
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல, எமக்கான தேசியக் கொடி இதுவல்ல என்ற உணர்வு தமிழர்களான எம்மத்தியில் எழுகின்றது. ஒரு தேசத்தில், ஒரு தேசிய கொடியில் தமிழர்களை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை சிங்கள பேரினவாத தலைமைகள் வெளிக்காட்டி விட்டது என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இது தமிழர் தரப்பிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் கூறியதானது, தமிழ் மக்கள் இந்த நாட்டில் புறக்கணிகப்பட்ட மக்கள் என்பதை காட்டும் விதத்தில் சிங்கள தரப்பினர் பல்வேறு செயற்பாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
யுத்தத்திற்கு முன்னரும் சரி யுத்த காலகட்டத்திலும், யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்தும் கூட சிங்கள தரப்புகள் தமது மனங்களில் இதனை கனமாக வைத்துக் கொண்டு பயணிக்கின்றனர்.
இந்த நாடு தமிழர்களுக்கு அல்ல என சிங்கள பேரினவாத சக்திகளே கூறிக் கொண்டுள்ளது. அதன் ஒரு வெளிப்பாடே இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களின் உரிமையை பறிக்கும் விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி தேசிய கீத புறக்கணிப்பாகும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கின்றது என்பது தமிழர்கள் இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவே அமைகின்றது.
ஒரு தேசம், ஒரு தேசிய கோடி என்ற ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்த சிங்கள தலைமைகள் தயாராக இல்லை என்பதை அவர்கள் தெளிவாக கூறி வருகின்றனர்.
இந்த நாட்டினை புறக்கணிக்க தமிழர்கள் எந்த செயற்பாடுகளையும் செய்யவில்லை, ஆரம்பம் முதற்கொண்டு சிங்கள தலைவர்களே இந்த நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற வகையில் சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமளிக்கக் கூடிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment