ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பொழுது 13 வது சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறியதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோல் இந்த விஜயத்தின் பொழுது இந்தியாவில் இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடாத்தியமையை கண்டிக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர்களுக்கான சந்திப்பு ஒன்று நுவரெலியா நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டில் இன்னும் இன பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் இருக்கின்றது. நாடும் உரிய அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமானால் இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இன பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இந்தியா சென்று நாடு திரும்பி உள்ளார்.
இவரின் விஜயத்தின் பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் 13 வது சட்டத்தை அமுல்படுத்தி இனப்பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி இதனை நடைமுறைப்படுத்த நடிவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இலங்கையில் இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கும் ஒற்றுமை இன்மை காரணமாகவே 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றது. இதனால் பல பின்னடைவுகளை நாடு சந்தித்தது. அதனால் தற்போது நாடு அபிவிருத்தியில் பின்னடைவை நோக்கி உள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபட்டு உள்ளார்.
இவர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். அதுவே தற்போது நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வட கிழக்கு மலையக மக்கள் நிம்மதியாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருபான்மை இன மக்களின் கெடுபிடிகள் இல்லை. அவர்களும் நாட்டின் நிலமையை புரிந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இலங்கையின் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த வேலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை சிலர் நடாத்தினர். இந்த செயற்பாடு இங்குள்ள பெருபான்மை சிங்கள மக்களை ஆத்திரம் அடைய செய்யும் செயற்பாடாகும். இவர்கள் கொந்தளித்தால் மீண்டும் வட கிழக்கு மலையக மக்கள் நிம்மதியாகவே வாழ முடியாது.
அங்கு ஆர்பாட்டங்ளை செய்து விட்டு நீங்கள் வீட்டுக்கு போய் நிம்மதியாக இருந்து விடுவீர்கள் இங்கு அடி வாங்குவது நாங்களே. அதனால் இந்தியாவில் வாழும் எங்களது தொப்புள் கொடி உறவுகளே உங்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம்.
உங்களது செயற்பாடுகள் அனைத்தும் எங்களது நிம்மதியான வாழ்க்கைக்காக இருக்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் உங்களது அழுத்தங்கள் இங்குள்ள மக்களின் அபிவிருத்திகள் மற்றும் 13 வது சட்டம் அமுல்படுத்துதல் தொடர்பாக இருக்க வேண்டும்.
13 வது சட்டம் என்பது இலங்கையில் உள்ள இன பிரச்சனைக்கான தீர்வு சட்டமாகும். அதனை அமுல்படுத்தினாலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இதனையே இந்திய பிரதமர் மோடி அவர்கள் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.
மலையக நிருபர் திருஞானம்
No comments:
Post a Comment